உங்கள் பெயர் “கலியமூர்த்தி”யா ? இந்தப் பெயருக்குப் பொருள்
தெரியுமா ?
தமிழில் கலி என்பதற்கு அம்பு, ஒலி, கடல், கேடு, சனி, சிறுமை, போர், வஞ்சகம், வலி, வறுமை, செருக்கு, எனப் பல பொருள்கள் உள்ளன. ஆர்கலி என்றால் ஆர்ப்பரிக்கும் கடல் என்று
பொருள் !
திருப்பாற்கடலில் திருமால் பாம்புப் படுக்கை மீது துயில்
கொள்ளும் நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். கடலில் உறைபவன் என்னும்
பொருளில்தான் திருமாலுக்கு கடல்வாணன் என்றொரு பெயருமுண்டு. இதே காரணம் பற்றித்தான்
கலியில் ( கடலில் ) உறைபவன் என்ற அடிப்படையில் திருமாலைக் கலியன் என்று
அழைக்கலாயினர் !
கலியன் அல்லது கலியமூர்த்தி என்று பெயர் சூட்டப் பெற்று
இருப்பவர்களில் எத்துணை பேருக்குத் தங்கள் பெயருக்குப் பொருள் புரிந்திருக்கும்
என்று சொல்ல இயலாது. ஒவ்வொரு மனிதனும் தங்களது பெயரின் பொருள் என்ன என்பதைப்
புரிந்து வைத்திருப்பது நலம் !
கலி - கலியன் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றி வழக்கில்
இருந்துவரும் பெயர்களையும், அப்பெயர்களை புதுமைப் படுத்திக்
கொண்டால் எத்தகைய பெயராக அமையலாம் என்பதற்கான பரிந்துரையும் தரப்படுகிறது !
-----------------------------------------------------------------------------
கலியன்............... = கடல்வாணன்
கலியமூர்த்தி....... = அலைவாணன்
கலியபெருமாள். = ஆழியமுதன்
கலியராஜ்
.............. = கடலரசு
-----------------------------------------------------------------------------
கலி எனப்படும் கடலில் இருவகை அலைகளைக் காணலாம். ஆழ்கடலில் அலை மென்மையாக எழுந்து பரவும். கரையோரமாக வரும் அலை சீறலுடன் உயர்ந்து சுருண்டு விழும். தமிழில் “திரை” என்னும் சொல், பிற பொருள்களுடன் அலையையும் குறிக்கும் !
மென்மையாக எழுந்து பரவும் அலையை “இளந்திரை” என்று சொல்லலாம். திருமால் கடலில் அரவணை மீது துயில்கொள்ளும் இடமும் “இளந்திரை” உள்ள இடம் தானே ! “இளந்திரை” உள்ள கடலில் அரவணை மீது துயில் கொள்ளும் திருமால் “இளந்திரையன்” அல்லவோ ? “இளந்திரையன்” என்னும் பெயரின் காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?
-----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மீனம், (பங்குனி) 14]
{28-03-2022}
---------------------------------------------------------------------------
![]() |
கலியமூர்த்தி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக