தமிழ் வாணன் என்பது உங்கள் பெயர் ! வாணன் என்றால் என்ன
?
வாழ் + ந் + அன் = வாழ்நன் = வாணன். வாணன் என்னும் சொல்லுக்கு வாழ்பவன் என்று பொருள். தமிழ்வாணன் என்றால் தமிழறிவைத் தன்னிடம் நிரம்பப் பெற்று வாழ்பவன் என்று பொருள். கலைவாணன் என்றால் கலைகளைத் தன்னிடம் நிரம்பவும் பயிலச் செய்து வாழ்பவன் என்று பொருள். வாணன் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு வழங்கப்படும் பெயர்களைக் காண்போமா !
==============================================
இராமன் = எழில்வாணன் (இராமம்=எழில்) எழில்மேனி பெற்று வாழ்பவன்)
சிவன் = நீலவாணன் (நீல வண்ணக் கறை மிடறு பெற்று வாழ்பவன்) =
கோபாலன் = ஆவாணன் (ஆ=பசு) பசு நிரைகளைச் சார்ந்து வாழ்பவன்)
தமிழ்வாணன் = தமிழ்வாணன் (தமிழில் வல்லமை பெற்று வாழ்பவன்)
வித்யாபதி = கலைவாணன் (கலைகளில் வல்லமை பெற்று வாழ்பவன்)
திருமால் = அலைவாணன் (பாற்கடலில் அலைமீது ஆலிலையில் துயிலும் கண்ணன்)
ரெங்கநாதன் = அரங்கவாணன் (திருவரங்கத்தில் பள்ளி கொண்டு வாழ்பவன்) =
கலியபெருமாள் = ஆழிவாணன் (கலி = கடல்) கடல் அலைமீது பள்ளி கொண்ட பெருமாள்
சமுத்திரம் = கடல்வாணன் (பாற்கடலில் ஆலிலையை இடமாக்கித் துயிலும்
திருமால்)
கோகுல கிருஷ்ணன் = கோகுலவாணன் (கோகுலத்தில் வாழும் கண்ணன்)
கோபாலகிருஷ்ணன் = ஆகுலவாணன் (ஆநிரை புரந்து வாழும் கண்ணன்)
இமயபதி = மலைவாணன் (கயிலை மலையை வாழிடமாகக் கொண்ட சிவன்)
மருதை ; மருதப்பன் = மருதவாணன் (மருத நிலத்தின்
தலைமை ஏற்று வாழும் அரசன்)
சபாநாயகம் = மன்றவாணன் (மன்றம்=சபை) சபையில் எழுந்தருளியுள்ள நாயகன்)
வனராஜன் = முல்லைவாணன் (முல்லை நிலத்தின் அரியணை ஏற்று வாழும்
அரசன்)
கவிராஜன் = பாவாணன் (பாக்கள் இயற்றும் வல்லமை பெற்று வாழ்பவன்)
ஞான மணி. = மதிவாணன் (கூர்த்த மதி பெற்று அறிஞனாக வாழ்பவன்)
------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
06]
{19-06-2022}
-------------------------------------------------------------------------------
![]() |
வாணன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக