’வாலம்’ என்றால் என்ன ?
தெரியவில்லையா ?
பாலையன் என்ற பெயரை பால + ஐயன் என்று
பிரிக்கலாம். பால என்ற சொல் வால என்ற
சொல்லின் திரிபு. தமிழில் வால்
- வாலம் என்றால் இளமை, என்று பொருள்.
இளமைக் கருத்தைக் குறிக்கும் வால் என்னும் சொல்லின் அடிப்படையில் வாலை [இளம்பெண்], வாலிசை [இளம்பெண்], வாலாம்பாள்
[இளம்பெண்], வாலவயது [இளவயது], வாலலீலை [இளமை
விளையாட்டு], வாலாதித்தன் [இளஞ்சூரியன்], வாலகன் [ இளைஞன் ], வாலச்சந்திரன்
[இளம்பிறை], வாலன் [இளைஞன்] மற்றும் இதுபோன்ற பல சொற்கள்
தோன்றியுள்ளன.
தமிழ்ச் சொற்களில் இடம்பெறும் ”வ”கரம் ( வ )
வடமொழியில் பகரமாகத் திரியும். எடுத்துக்காட்டு:- வாலாம்பாள் = பாலாம்பாள்; வாலன் = பாலன்; வாலகிருஷ்ணன்
= பாலகிருஷ்ணன்; வாலசுந்தரம் = பாலசுந்தரம்; வாலசந்தர் = பாலசந்தர்; வாலரமணி = பாலரமணி; வாலபருவம் =
பாலபருவம்; வாலிவன் = வாலிபன்; கவடம் = கபடம்; கவடி = கபடி (சடுகுடு ஆட்டம்).
வால் + ஐயன் = வாலையன் என்ற பெயர் வடமொழித் தாக்கத்தால் திரிந்து பாலையன் என்று வழங்கப்படுகிறது. வால் என்பதற்கு இளமை; தூய்மை; தோகை; மிகுதி; வெண்மை; நன்மை; பெருமை; நீண்மை (நீளம்) என்று பொருள். ஐயன் என்பதற்கு அரசன்; அரிகரபுத்திரன்; அருகன்; அழகன்; ஆசிரியன், உயர்ந்தோன்; இறைவன்; சிவன்; தமையன்; தலைவன்; மூத்தவன் எனப் பல பொருள்கள் உள்ளன !
பாலையன் = வாலையன் = வால் + ஐயன் = இளமை + அரசன்
= இளவரசன் என்று பொருள். பாலையன் அல்லது பாலையா என்றால் இளவரசு என்று பொருளாகும்.
வாலம் = பாலம் = இளமை என்ற பொருள் அடிப்படையில் தோன்றும் சில பெயர்களைப்
பார்ப்போமா !
-----------------------------------------------------------------------------------
பாலையன்..................................=
இளவரசன்
பாலையா....................................=
இளவரசு
பாலசந்திரன்..............................=
இளம்பிறை
பாலசந்தர்....................................=
இளமதி
பாலன்..........................................=
இளவழகன்
பாலசுப்பிரமணியன்.................= இளமுருகு
பாலாம்பாள்................................=
இளவழகி
பாலமுருகன்.................................=
இளமுருகு
பாலகிருஷ்ணன்.........................=
இளங்கண்ணன்
பாலகோபால்...............................=
இளமாலன்
பாலதண்டாயுதம்.......................=
இளமுருகு
பாலசரசுவதி................................=
பூவழகி
பாலரமணி.(ரமணி=அழகு)......= இளவழகன்
பாலசுந்தரி...................................=
இளவழகி
பாலாமணி (மணி.=.சூரியன்)..= இளங்கதிர்
பாலசுந்தரம்................................=
இளவழகன்
பாலாஜி……………………………....…=
இளங்கண்ணன்
பாலா……………………………....……..=
இளவல்
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 06]
{20-05-2022}
------------------------------------------------------------------------------------
![]() |
இளவரசு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக