இந்திரன் என்னும் பின் / முன்னொட்டுப் பெயர்கள் - பொருளென்ன ?
ஒவ்வொரு மனிதனும் தன் பெயருக்கான பொருளை அறிந்து வைத்திருத்தல்
இன்றியமையாத் தேவை. தமிழ் நாட்டில் எத்துணைப் பேர் இப்படித் தன் பெயரின் பொருளைத்
தெரிந்து வைத்திருப்பார்கள் என்றுக் கருதுகிறீர்கள் ?
கடைத் தெருவில் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அருகில் சென்று, இங்கிருப்பவர்களில் யார் யாருக்கு உங்கள் பெயரின் பொருள் தெரியும் என்றுக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலானோர் ஏதோ கடவுள் பெயர் என்றுத் தெரியும்; ஆனால் பெயரின் பொருள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தம் பெயரின் பொருளைச் சொல்வார்கள் !
தமிழ்நாட்டு மக்களின் பெயர்களில் 90% வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அடிநிலை மக்களின் பெயர் “கலியன், வீரன், அஞ்சான், குஞ்சு, காளி...” போன்ற தமிழ்ப் பெயர்களாக இருக்கும். இத்தகைய பெயர்கள் 5% இருக்கும். ஆனால் அவை மதிப்புக் குறைவான பெயர்கள் என்னும் கண்ணோட்டம் இடைநிலை மக்களிடமும். மேல்நிலை மக்களிடமும் இருப்பதால், அப்பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதில்லை !
அறிவழகன், வில்லாளன், முல்லைவழுதி, நாவுக்கரசு போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை 5% மக்களிடம் நாம் காணமுடியும். தமிழ் உணர்வு என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய அரசியல் தலைவர்களே இப்போது எங்கும் நிறைந்து இருப்பதால், மக்களுக்கும் தமிழ் உணர்வு இல்லாமற் போய்விட்டது. அதனால் மக்களும் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை !
பொருளையே புரிந்து கொள்ளாமல் வடமொழிப் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெற்றோர், அப்பெயர்களின் பொருள் புரிய வந்தால், நிலைகுலைந்து போவார்கள் ! அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
பெயர்.............நேரடிப் பொருள்......மறைமுகப் பெயர்
-------------------------------------------------------------------------------------
அகோரம்........அழகில்லாதவன் .............(சிவன்)
பூவராகன்.......நிலப் பன்றி...................(திருமால்)
நாகசுந்தரம்....அழகிய பாம்பு................................
மாருதி..............குரங்கு.........................(அநுமான்)
மாத்ருபூதம்...தாய்ப் பேய்............................................
நந்திதேவன்...காளை மாடு................(சிவனூர்தி)
கோபால்..........மாடு மேய்ப்பவன்........(திருமால்)
வைரவன்........நாய் வாகனன்................(நாயூர்தி)
பைரவி.............பேய்................................(துர்க்கை)
சுடலை............சுடுகாடு...............................(சிவன்)
காளி................கறுப்பி.................................(உமை)
-------------------------------------------------------------------------------------
இப்படி மதிப்புக் குறைவான பெயர்களைச் சூட்டிக் கொண்டு வலம் வரும்
தமிழ் மக்கள் நூறாயிரக் கணக்கில்
இருக்கின்றனர் !
சரி ! இந்திரன் என்னும் பெயருக்கு உங்களுக்குப் பொருள் தெரியுமா ? இப்பெயருக்குப் பல பொருள்கள் உள்ளன. வானவர் தலைவன், தலைவன், அரசன், புலவன், கடவுள், விநாயகன், கேட்டை மீன், என்றெல்லாம் பொருள் கூறுகிறது தமிழ் அகரமுதலி !
இராசேந்திரன் என்றால் அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சக்கரவர்த்தி) – மன்னர் மன்னன் என்று பொருள். இராசராசன் என்றாலும் அதே பொருள்தான். நாகேந்திரன் என்றால் நாகங்களின் தலைவன் என்று பொருள். இவ்வாறு இந்திரன் என்னும் சொல்லை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு அமைந்துள்ள வடமொழிப் பெயர்களையும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !
------------------------------------------------------------------------------------
வடமொழி..................................தமிழ்
------------------------------------------------------------------------------------
இராசேந்திரன்.................மன்னர் மன்னன்
இராசராசன்......................கோவேந்தன் (கோ = அரசன்)
மகேந்திரன்......................பேரரசு (மகா = பெரிய)
நாகேந்திரன்.....................அரவரசு (அரவம் – பாம்பு)
குபேந்திரன்......................செல்வப் பெருந்தகை
புவனேந்திரன்.................பூவரசு (புவனம் = உலகம் = பூ).
தர்மேந்திரன்...................அறவரசு (தர்மம் = அறம்)
கசேந்திரன்......................வேழவேந்தன் (கசம் = வேழம்)
ஞானேந்திரன்................அறிவுக்கரசு (ஞானம் = அறிவு)
விசயேந்திரன்.................வெற்றி வேந்தன் (விசயம் = வெற்றி)
சுரேந்திரன்.......................விண்ணரசு (சுரர் = வானவர்)
சுசீந்திரன்.........................மதியரசு (சுசி = நிலவு, மதி)
நரேந்திரன்.......................பூவேந்தன் (நரன் = மனிதன்)
இந்திரகுமாரி..................இளவரசி (இந்திரன் = அரசன்)
இந்திரகுமார்...................இளவரசன் (குமார் = மகன்)
------------------------------------------------------------------------------------
தமிழன் என்று சொல்லிக் கொண்டு, நம் பெயர்களை வடமொழிப் மொழி பெயர்களாக வைத்துக் கொள்வது தலைக்குனிவான செயல் அல்லவா ? நம் பெற்றோர்கள் தான் அந்தத் தவற்றைச் செய்துவிட்டனர். நாமாவது நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை வைக்கலாமே !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Vedarethinam70@@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
22]
{05-06-2022}
------------------------------------------------------------------------------------
![]() |
இராசேந்திரன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக