நாணற் பொய்கையருகில் பிறந்தவனா சரவணன் !
------------------------------------------------------------------------------------
தமிழர்கள் எத்தனையோ வகைகளில் தங்கள்
மூலத்தை (ORIGINALITY) இழந்து விட்டார்கள். அந்த வகையில் தங்கள் பெயரும் அதில் அடங்குகிறது
என்பது அவர்களுக்குத் தெரியாது. தாங்கள் சூட்டிக் கொண்டிருக்கும் பெயர் தமிழ்ப்
பெயரா என்பது பற்றிய புரிதல் கூடப் பெரும்பான்மை மக்களுக்கு இல்லை. அந்த வரிசையில்
இன்று நாம் பார்க்கப் போகும் பெயர் சரவணன் !
”சரம்” என்றால் வடமொழியில் நாணல் என்று பெயர். “அணன்” என்றால் பொருந்தியவன். ஒரு குளக்கரையில் நாணற் புல் மண்டிக் கிடந்ததாம். அந்த நாணற் புற்களுக்கு இடையே ஒரு குழந்தை கிடந்ததாம். அதைக் கொண்டு வந்து மலைமகள் (பார்வதி தேவி) வளர்த்தாளாம். அந்தக் குழந்தையே வளர்ந்து “சரவணன்” என்னும் பெயர் தாங்கி முருகனாகக் குன்று தோறும் குடி கொண்டு விளங்கினானாம்!
தமிழர்களை நம்ப வைக்க வடமொழியாளர்கள் கட்டி விட்ட கதைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பீர்களே ! சரவணன் என்றால் முருகன் என்று பொருள். “சரவணன்” என்பது தமிழ்ச் சொல் அன்று என்பதும் உங்களுக்கு விளங்கி இருக்கும் !
சரி ! சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? ”நாணற் செல்வன்” நேரடி மொழி பெயர்ப்புச் சொல். வேறு வகையில் எப்படி அழைக்கலாம் ? சரவணன் என்பது முருகனைக் குறிக்கும் சொல் அல்லவா ? முருகன் குன்றுகளில் (மலைகளில்) குடிகொண்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். அறுபடை வீடுகளும் குன்றின் மீதான கோயில்கள் அல்லவா ?
தமிழில் மலை என்பதைக் குறிக்கும் சொல் “சிலம்பு”. மலை என்றாலும் குன்று என்றாலும் ஒன்று தானே ! குன்றில் குடி கொண்ட முருகன், சிலம்பின் செல்வன் அல்லவா ! அதாவது சிலம்பில் குடிகொண்ட செல்வன் ! ஆகையால் சரவணன் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் “சிலம்புச் செல்வன்” என்று அழைக்கலாம்.
------------------------------------------------------------------------------------
சரவணன்..................=
சிலம்புச் செல்வன்
சரவண மூர்த்தி......= குன்றக்
குரிசில் (குன்றின் தலைவன்)
சரவணக் குமார்.....=
குன்றவாணன் (குன்றில் வாழ்பவன்)
-------------------------------------------------------------------------------------
உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால்
சிலம்புச் செல்வன் என்று பெயர் சூட்டுங்கள் ! பெயரன் பிறந்தாலும் இதே பெயரைச்
சூட்டுங்கள் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
20]
{03-06-2022}
------------------------------------------------------------------------------------
![]() |
சரவணன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக