இந்தப் பெயருக்குப் பொருள் தெரியுமா உங்களுக்கு ?
------------------------------------------------------------------------------------
உலகத்தில் பல்லாயிரக் கணக்கில் மதங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்து மதம். ஒவ்வொரு மதத்திலும் ஒன்றிரண்டு
அல்லது அதற்குக் கூடுதலாகச் சில கடவுள்கள் உண்டு. ஆனால் இந்து மதத்தில் கடவுள்களின்
எண்ணிக்கைக்கு அளவே இல்லை. அதுபோன்றே கடவுள்களைப் பற்றிய கதைகளுக்கும் உயர் வரம்பே
இல்லை!
அந்தக் கதைகளில் ஒன்றைத் தான் இப்போது உங்களுக்குச் சொல்லப்
போகிறேன். பண்டைக் காலத்தில் இமயமலையில் ஒரு முனிவர் தம் மனைவியுடன்
வாழ்ந்து வந்தார். அவர் பெயர் மிருகண்டு முனிவர். அவர் மனைவி பெயர் மருத்மதி ! அந்தக் காலத்தில் ”முனிவர்” என்றால் திருமணம் செய்துகொள்ளாத ”துறவி” என்று பொருள் அல்ல !
அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாததால், சிவபெருமானை அல்லும் பகலும்
வழிபட்டு வந்தனர். அவர்கள் வழிபாட்டில் மனம் குளிர்ந்த சிவபெருமான், நேரில் தோன்றி, உனக்கு என்ன வேண்டும் கேள்
என்றார் முனிவரும் அவர் மனைவியும் சிவபெருமான் காலில் விழுந்து வணங்கி, எங்களுக்குக் குழந்தைப்
பேறு வேண்டும், அதற்கு அருள்புரிவாய் என்று கேட்டுக்கொண்டனர் !
சிவபெருமான்,
அன்று சற்று “குறும்பு” மனநிலையில் இருந்தார் போலும் ! சரி ! குறைந்த வாணாள் (ஆயுசு) உடைய மிகச் சிறந்த அறிவாளி மகன் வேண்டுமா அல்லது நீண்ட வாணாள் (ஆயுசு) உடைய அறிவுக் கூர்மையில்லாத
மகன் வேண்டுமா என்றுமுனிவரிடம் கேட்டிருக்கிறார் !
சற்றுத் திகைத்துப் போன முனைவர் இறுதியில், குறைந்த வாணாள் (ஆயுசு) உடைய மிகச் சிறந்த அறிவாளி மகன் கிடைப்பதற்கு அருள் புரிவாய்
என்று கேட்டுக் கொண்டார். அப்படியே ஆகட்டும். உன் அறிவாளி மகன் தன் 16 –ஆம்
அகவையில் இறந்து போவான் என்று கூறிவிட்டு, சிவபெருமான் மறைந்து போனார் !
பத்து மாதம் சென்றபின் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு “மார்க்கண்டேயன்” என்று பெயரிட்டு முனிவரும் அவர் மனைவியும் வளர்த்து வந்தனர். குழந்தை வளர வளர மிகுந்த அறிவாளியாகவும் சிவவழிபாடு மிகுந்தவனாகவும் வளரலானான் !
அகவை
16 நிறைவடையும் நாள் வந்தது. மார்க்கண்டேயன் சிவ இலங்கம் (சிவ லிங்கம்) அருகில் அமர்ந்துகொண்டு
சிவனை வழிபடலானான். அந்த நாள் நிறைவடையும் வேளையில் கூற்றுவன் (எம தர்மன்) கையில் கயிற்றுடன் எருமை
மீது ஏறிக்கொண்டு மார்க்கண்டேயன் அருகில் வந்து அவன் மீது சுருக்கு இடப்பட்ட கயிற்றை
வீசியிழுத்தான் – அவனைப் பிடித்துச் செல்ல !
மார்க்கண்டேயன் மீது வீசப் பட்ட சுருக்குக் கயிறு சிவ இலங்கம்
மீது விழுந்து அதை இறுக்கியது. அதனால் சினம் கொண்ட சிவ பெருமான் தன்னுருவில் தோன்றி, கூற்றுவனைத் தாக்கி விரட்டியடித்தார். விதிக்கப்பெற்ற வேளை முடிந்துவிட்டதால், கூற்றுவனால் மார்க்கண்டேயனைப்
பிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் அவன் திரும்பிச் சென்றான் !
குறித்த வேளை,
கேடு ஏதுமின்றி கடந்ததால் , மார்க்கண்டேயன் சாவிலிருந்து
தப்பித்தான். சிவபெருமான் அவனுக்கு முடிவற்ற வாணாள் (சாகா வரம்) அளித்து வாழ்த்தி மறைந்தார் !
இது தான் சொல்லப்படும் கதை ! சாவின் பிடியிலிருந்து
மார்க்கண்டேயனைக் காத்த ஐயனாகிய சிவபெருமான் அன்று முதல்
காத்த + ஐயன்
= “காத்தையன்” என்று அழக்கப் படலானார். மார்க்கண்டேயனைக் காத்த இலங்கம் (லிங்கம்) காத்தலிங்கம் ஆகியது !
கதை கேட்பது என்றால் எந்த மனிதனுக்கும் ஆர்வம் எழுவது இயல்புதானே ! மார்க்கண்டேயன் கதையால் ஈர்க்கப்பட்ட நம் மக்கள் தம் குழந்தைகளுக்கு, “காத்தையன்” என்றோ “காத்தலிங்கம்” என்றோ பெயர் வைத்து மகிழலானார்கள் !
உண்மைக்கதையோ கட்டுக்கதையோ, மக்களிடையே இன்றும் கூடக்
கதைகளுக்கு ஒரு செல்வாக்கு உண்டு. “காத்தையன்” அல்லது “காத்தலிங்கம்” என்று பெயர் சூட்டப்பெற்ற
குழந்தைகள் வளர்ந்த பின் அப்பெயர்களால் சிலர் கூச்சம் அடையலானார்கள். இக்காலத்தில் பெயரை மாற்றிக்
கொண்டு அரசிதழில் அறிவிப்புச் செய்தால் புதிய பெயர் சட்டத்தாலும் ஏற்கப்படுகிறது !
இவர்களுக்குப் புதிதாக என்ன பெயர் சூட்டலாம் ? இதோ என் பரிந்துரை !
------------------------------------------------------------------------------------
காத்தையன்
(சிவபெருமான்) = அழல்வண்ணன்
காத்தலிங்கம்
(சிவபெருமான்) = சுடர்வண்ணன்
காத்தான் (சிவன்)......................= சிலம்பரசன்
காத்தாயி.....................................= சிலம்புச் செல்வி
சிவலிங்கம்
(சிவபெருமான்) = சேயோன் (சிவந்தவன்)
----------------------------------------------------------------------------------
பெயர் விளக்கம் (01) மார்க்கண்டேயனைத் காத்தருளியதால் சிவனுக்குப் பெயர் “காத்தான்” சிவன் கயிலாய மலையில் இருப்பவன் - அதாவது கயிலாயம் என்னும் சிலம்பில் (மலைக்கு இன்னொரு பெயர், சிலம்பு) இருப்பவன். ஆகையால் சிவனுக்குப் பெயர் = சிலம்பரசன். காத்தாயி = காத்தானின் (சிவனின்) மனைவியாகிய உமை. ஆகையால் காத்தாயி = சிலம்புச் செல்வி.
------------------------------------------------------------------------------------
பெயர் விளக்கம் (02) சிவபெருமான் சிவப்பு நிறத்தவர். அழலின்
நிறமும் சிவப்பு. ஆகையால் சிவந்த வடிவுடைய சிவ பெருமான் “அழல் வண்ணன்” ஆனார். “சுடர்”
என்றலும் சிவந்த நிறத்தைக் குறிக்கும் சொல்லாகும். எனவே சிவபெருமான் “சுடர்வண்ணன்”
ஆனார் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]
{01-06-2022}
-----------------------------------------------------------------------------------
![]() |
காத்தையன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக